Sunday, June 13, 2010

காதலனை கூலிப்படை ஏவி தாக்கிய டிவி நடிகை கைது


திருமணம் செய்ய மறுத்த காதலனை கூலிப்படையை ஏவி தாக்கிய ஆந்திர டி.வி. நடிகை கைது செய்யப்பட்டார்.


ஆந்திராவை சேர்ந்தவர் டிம்பிள் வர்மா. தெலுங்கு டி.வி. தொடர்களில் நடித்து வருகிறார். டி.வி, நடிகரான ஸ்ரீதர் என்பவரும், இவரும் காதலித்து வந்தனர். இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்தனர். தன்னை திருமணம் செய்வதாக கூறி வந்த ஸ்ரீதர், திடீரென வேறொரு பெண்ணை காதலிக்கத் தொடங்கினார். டிம்பிளை கைகழுவினார். இதனால் ஆத்திரம் அடைந்த டிம்பிள், ஸ்ரீதரை பழி வாங்கவும், தனது காதலை வெளி உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டவும் முடிவு செய்தார்.


இதற்காக, தனது உதவியாளர்கள் மணி, நாகராஜ் மற்றும் பிரபாகர் ஆகியோரின் உதவியை நாடினார். கடந்த 8ம் தேதி ஸ்ரீதர் வெளியே சென்றிருந்தபோது இந்த மூன்று பேரையும் ஏவி அவர் மீது தாக்குதல் நடத்தினார். அப்போது, செல்வராஜ் என்ற மற்றொரு டிவி நடிகரின் பெயரை சொல்லி அவர்கள் தாக்கினர். இது தொடர்பாக போலீசில் புகார் கொடுத்த ஸ்ரீதர், செல்வராஜின் ஆட்கள் தன் மீது ஆசிட் வீச முயன்றதாக கூறினார். போலீஸ் விசாரணையில் அது வெறும் எரிச்சாராயம் என்பது தெரிந்தது.


இதற்கு அடுத்த நாள், மணியும் டிம்பிளும் நாடக ஷூட்டிங்குக்காக ஐதராபாத் அருகே சென்றபோது நடுரோட்டில் ஒரு பெண் படுத்து இருந்ததாகவும், அவரிடம் சென்று விசாரித்தபோது திடீரென தங்கள் மீது மிளகாய் பொடியை தூவி, இரும்பு தடியால் தாக்கியதாகவும் போலீசில் டிம்பிள் புகார் கொடுத்தார். அப்போது, தன்னை பழி வாங்குவதற்காக இந்த தாக்குதலை நடத்துவதாக அந்த பெண் கூறியதாக தெரிவித்த டிம்பிள், தாக்குதலில் ஏற்பட்ட காயங்களையும் காட்டி நாடகமாடினார். இந்த தாக்குதலால் டிம்பிள், ஸ்ரீதர் பற்றி பரபரப்பாக பேசப்பட்டது. அப்போது பேட்டி அளித்த டிம்பிள், தானும் ஸ்ரீதரும் நெருங்கி காதலிப்பதாக அறிவித்தார்.


போலீஸ் நடத்திய விசாரணையில், இந்த தாக்குதல்கள் அனைத்துமே டிம்பிளின் ஏற்பாடுதான் என்பது தெரிந்தது. இதையடுத்து, டிம்பிள், மணி, நாகராஜு ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பிரபாகரை தேடி வருகின்றனர். இவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.


No comments:

Post a Comment