Monday, April 26, 2010

வரியிலிருந்து தப்பிக்க ஐடியா சொன்ன வருமான வரித்துறைகமிஷனர்


மும்பை : ரொக்கம் 46 லட்ச ரூபாய்; பல்வேறு நாட்டுக் கரன்சியில் ஐந்து லட்ச ரூபாய்; 50 லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகள், வங்கிப் பணம் 35 லட்ச ரூபாய்; இவையெல்லாம் அரசியல்வாதியிடம் பறிமுதல் செய்யப்பட்டவை அல்ல; வருமானவரித் துறை கமிஷனரிடம் கைப்பற்றப்பட்டவை.

மகாராஷ்டிர மாநிலம் தானே நகரில் வருமானவரித் துறை கமிஷனர் சுமித்ரா பானர்ஜி. இவர், ஒரு கட்டுமான அதிபரிடம் ஒரு கோடியே 50 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டு, இப்போது சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.சுமித்ரா பானர்ஜி, கட்டுமான அதிபர் செலுத்த வேண்டிய ஒரிஜினல் வரியான 25 கோடி ரூபாயைச் செலுத்தாமல் இருக்க வழி சொல்வதற்காக அவரிடம் பேரம் பேசத் தொடங்கினார். முதலில் பேரம் நான்கு கோடி ரூபாயில் தொடங்கியது; பேரம் படியவில்லை.இறுதியில் ஒரு கோடியே 70 லட்ச ரூபாய் லஞ்சம் தருவதாக அதிபர் ஒப்புக் கொண்டார். இந்தச் செய்தி சி.பி.ஐ.,க்கு கிடைத்தவுடன் சுமித்ராவையும் அவர் கணவர் சுப்ரோத்தோவையும் கைது செய்துள்ளனர்.தொடர்ந்து அவர்கள் சுமித்ராவின் வீட்டில் நடத்திய அதிரடி சோதனையில் கிடைத்த ஆபரணங்கள், ஆவணப் பத்திரங்கள், வெளிநாட்டுக் கரன்சி நோட்டுகளைக் கண்டு மலைத்துப் போயினர்.

இதுகுறித்து மூத்த சி.பி.ஐ., அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சுமித்ராவின் சொத்துப் பட்டியலைப் பார்த்து நாங்கள் மலைத்துப் போனோம். இன்னும் அவரது வங்கி லாக்கர் திறக்கப்படவில்லை' என்று வியப்புடன் கூறினார்.

அதிரடி சோதனையில் கிடைத்த பட்டியல் இது:கையிருப்பாக, 46 லட்ச ரூபாய்; பல நாட்டுக் கரன்சிகளாக ஐந்து லட்ச ரூபாய்; மலேசியா, புனே, செம்பூரில் தலா ஒவ்வொரு பிளாட்டுகள், சிங்கப்பூர் மற்றும் மலேசியாவின் வங்கிகளில் தலா இரண்டு கோடி ரூபாய் டிபாசிட்; மும்பை ஐ.டி.பி.ஐ., வங்கியில் 35 லட்ச ரூபாய்; நிரந்தர வைப்பாக 20 லட்ச ரூபாய்; டொயோட்டா மற்றும் ஸ்கோடாவின் அதிநவீன ரக கார்கள், 50 லட்ச ரூபாய் மதிப்புடைய நகைகள்.சுமித்ராவுக்குத் தரகராக வேலைபார்த்த சார்ட்டட் அக்கவுன்டன்ட் அம்லானி என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். யார் வரிகட்டாமல் தப்பிக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்களை சுமித்ராவுக்கு அறிமுகம் செய்து வைத்து வழியைக் காட்டுவதுதான் அம்லானியின் வேலை. வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் சுமித்ராவை சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.







திட்டம் போட்டு திருடுற கூட்டம்
திருடிக் கொண்டே இருக்குது - அதை
சட்டம் போட்டு தடுக்குற கூட்டம்
தடுத்துக் கொண்டே இருக்குது
திருடனாய் பார்த்து திருந்தா விட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது




No comments:

Post a Comment