Monday, September 13, 2010

கயிற்றால் கழுத்தை நெரித்து கணவனை கொன்றது அம்பலம்


குன்றத்தூரில் கார் டிரைவர் கொலையில் துப்பு துலங்கியுள்ளது. நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த கணவனை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து போர்வையால் மூடி, நைலான் கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்து முட்புதரில் மனைவியே வீசியது அம்பலமானது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

குன்றத்தூர் 2ம் கட்டளை ராகவேந்திரா நகரை சேர்ந்தவர் செல்லப்பன் (35). கார் டிரைவர். இவரது மனைவி தேவகி (32). 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த 31ம் தேதி குன்றத்தூர் காவல் நிலையத்தில் தேவகி ஒரு புகார் கொடுத்தார். அதில், ‘எனது கணவர், வீட்டு அருகில் உள்ள முட்புதரில் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார்’ என்று கூறியிருந்தார்.

குன்றத்தூர் உதவி கமிஷனர் தெய்வசிகாமணி, இன்ஸ்பெக்டர் அழகு ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதில் துப்பு துலங்கவில்லை.

இதனால் புறநகர் கமிஷனர் ஜாங்கிட் உத்தரவின்படி தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. சந்தேகத்தின் அடிப்படையில் தேவகியிடம் தனிப்படை போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர். முன்னுக்குப்பின் முரணாக பேசிய அவர், தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டார்.

தேவகியின் வாக்குமூலம் பற்றி போலீஸ் தரப்பில் தெரிவித்ததாவது:
எனக்கும் எதிர் வீட்டில் வசிக்கும் கொத்தனார் வேலை செய்யும் சுந்தர் (32) என்பவருக்கும் கடந்த 6 மாதமாக கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. அவருக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

எங்கள் தொடர்பு என் கணவருக்கு தெரியவே கண்டித்தார். அதனால் அவரை தீர்த்துக்கட்ட இருவரும் முடிவு செய்தோம். அதற்கான நாளை எதிர்பார்த்து இருந்தோம்.

கடந்த 30ம் தேதி இரவு வீட்டில் என் கணவர் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். சுந்தரை நள்ளிரவில் வீட்டுக்கு வரவழைத்தேன். பெட்ஷீட்டால் கணவரது முகத்தை மூடினோம். பின் கழுத்தை நைலான் கயிற்றால் இறுக்கி கொலை செய்து, யாருக்கும் தெரியாமல் முட்புதரில் வீசிவிட்டு திரும்பினோம். காலையில் ஒன்றும் தெரியாததுபோல, கணவரை யாரோ கொலை செய்து முட்புதரில் வீசிவிட்டதாகக் கூறினேன்.

இவ்வாறு தேவகி வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து தேவகியை கைது செய்த போலீசார், அவர் கொடுத்த தகவலின்படி, சுந்தரையும் கைது செய்தனர். இருவரையும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


கள்ளக்காதலனுடன் மனைவி கைது

No comments:

Post a Comment